Powered By Blogger

Tuesday, December 11, 2012

ஒரு காலம் வரும். அப்போதைய மக்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே.

ஒரு காலம் வரும். அப்போதைய மக்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

சீர்திருத்தக்கூடிய மனிதனைவிட அவர்கள் செத்த கழுதையை மேலானது என்று கருதுவார்கள்.
ஆரம்பத்தில் உண்மையானது பிறருக்கு கசப்பாக தோன்றலாம்.
சொல்லுவோம்,சொல்லிக்கொண்டே இருப்போம்.


மனிதன் வயதையெல்லாம் அழிந்துபோகும் பொருளைத் தேடுவதிலும், தன்னை விட்டுப்பிரியும் மனைவி, மக்கள், சுற்றத்தார், சிநேகிதரோடு உல்லாசமாக இருந்து கொண்டு சந்தோச வாழ்க்கை நடத்துவதிலுமே செலவு செய்கிறான். விலை மதிக்க முடியாத ஒவ்வொரு மூச்சையும் இந்த முறையில்தான் வீணாக்குகின்றானே தவிர தான் பிறந்ததின் உண்மை நோக்கத்தைப் பற்றிக் சிறிதுகூட சிந்திப்பது கிடையாது. அவனது நோக்கம் தவறானது ஏனெனில் அவனுடைய தவறான நோக்கமானது முடிவில் பெரும் நஸ்டத்தைத்தான் உண்டாக்கும் என கீழ் இருக்கும் அஸ்ர் என்ற அத்தியாயத்தில் இறைவன் தெளிவுபட கூறுகிறான்.

"1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)".(அல்குர்ஆன். 103:1,2,3)

''தவறு நடப்பதை கண்டு உங்கள் மனம் புண்படுகிறதா?
அப்படியானால் அந்த கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்பதே பொருள். உங்களை அந்த கூட்டத்தில் ஒருவராகக் கணக்கிட முடியாது. அதே சமயம் தவறு நடக்கும் இடத்தில் இல்லாத ஒருவன் அந்த தவறை மனத்தால் விரும்பி வரவேற்றால், அவன் அந்த கூட்டத்தில் ஒருவனாகக் கணிக்கப்படுகிறான்!'


எனவே சமுதாயத்தில் ஒருவர் அல்லது ஒரு குழு சீர்திருத்த முயற்சியில் இறங்க வேண்டியது கடமையாகும். இந்த கடமையை யாரும் செய்யவில்லை என்றால் சமுதாயத்த்ல் அத்தனை பேரும் குற்றவாளிகளாகிறார்கள்.

''உங்கள் முன்னோரில் உறுதியுள்ள சிலர் நாட்டில் நடக்கும் தீய விளைவுகளைத் தடுத்துக் கொண்டிராவிட்டால் அவர்களில் பெரும்பாலோர் அழிந்து போயிருப்பார்கள்!'' அழிவுக்குக் காரணம் சீர்திருத்த முயற்சியின்மை என்னும் உண்மை இங்கு வெளியிடப்படுகிறது.


'ஒரு காலம் வரும். அப்போது பெண்கள் துரோகம் செய்வார்கள். ஆண்கள் நேர்மையை மறந்து குற்றம் புரிவார்கள். மனப்பயிற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள்.!'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

நான் சிறந்த மனிதர்களை உருவாக்க வேண்டும்; நல்ல பண்புள்ளவனாக வாழ வேண்டும்; எனது குடும்பத்தையும், என்னையும் நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும்; அதற்காக குர்ஆனையும் சுன்னாவையும் நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்; பிறருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்; தூய்மையான உள்ளத்தோடு வாழ்ந்து சுவனம் சென்று விட வேண்டும். இதுதான் எனது ஆசைஎன்று நான் என்ற நாங்கள் ஆரம்பத்தில் நமக்குள் உறுதிகளை உருவாக்கி குர்ஆன்,ஹதீஸின் அடிப்படையில் அதன் கருவூலங்களை தனக்குள் விதைத்து நான் என்ற வார்த்தையை தனக்குள் உருவாக்கினால் தானும் நல்வழியில் செல்லலாம்,பிறரையும் நல்வழிக்குள் அழைக்கலாம் இதுதான் நான் என்ற வார்த்தைக்கு வரைவிளக்கணம்.

அது மக்காவில் இஸ்லாத்தைப் போதித்த சோதனை மிக்க காலம். உலகில் ஏதேனும் ஒரு சாதனையை நிலை நாட்ட எண்ணுவது எப்படிப் போனாலும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கே உத்தரவாதமில்லாத காலம்.
இஸ்லாமும் முஸ்லிம்களும் பலமில்லாது இருந்த காரணத்தால் இம்சைக்குட்படுத்தப்பட்ட காலம்.
இதை சிறியதொரு கீழ் இருக்கும் வாரலாற்றின் மூலம் அறிந்து கொள்வோம்.

நபித்தோழர் கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்கள் எதிரிகளால் இம்சைக்குள்ளாக்கப்பட்டு கஃபாவை நோக்கி வருகிறார். அங்கு அமர்ந்திருந்த இறைத் தூதரை அவர் காண்கிறார். தனது நொந்து போன இதயத்தை நபிகளாரின் துஆவினால் வருடிக் கொள்ள நினைத்தாரோ என்னவோ, இறைத்தூதரைப் பார்த்துப் பின்வருமாறு கூறுகிறார்:”அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக உதவி கேட்டு அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்திக்கக் கூடாதா?”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்பாப் அவர்களை அமர வைத்து தானும் அவர் முன்னால் அமர்ந்தார்கள்; அமர்ந்தவர்கள் துஆ செய்யவில்லை. ஒரு கதை சொன்னார்கள்.”கப்பாப்! உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் இதனைவிட அதிகமாக துன்புறுத்தப்பட்டார்கள். ஒரு மனிதர் நிலத்தில் நடப்பட்டார். அவரது உடல் இரண்டு துண்டங்களாக வெட்டப்படும். அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட மாட்டார். நீங்கள் அவசரப்படுகிறீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ஒரு காலம் வரும்- சன்ஆவிலிருந்து ஹழ்ற மௌத் வரை ஒரு மனிதன் (மற்றுமொரு அறிவிப்பில் ஒரு பெண் என்றுள்ளது) தனிமையில் பயணம் செய்வான்; அவனது உள்ளத்தில் அல்லாஹ்வின் அச்சம் தவிர வேறு அச்சம் இருக்காது. சில போது அவனது ஆடுகளை ஓநாய் தாக்கும் என்ற அச்சம் இருக்கலாம்” என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

”அல்லாஹ்வின் மீது ஆணையாக அக்காலம் வரும்” என்று நம்பிக்கையோடு உறுதிபடக் கூறுகிறார்கள். ஏனைய இடங்களைக் குறிப்பிடாமல், ஏன் சன்ஆ, ஹழ்ர மௌத்தைப் பற்றி அவர்கள் குறிப்பிட வேண்டும்? வரலாறு சொல்கிறது; அக்காலத்தில் அநீதிகளும் வன்முறைகளும் அதிகரித்துக் காணப்பட்ட பிரதேசம் அரேபியாவில் அங்குதான் இருந்தது. அந்தப் பிரதேசத்தை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அமைதிப் பிரதேசமாக மாற்ற வேண்டும் என கனவு காண்கிறார்கள். அதனை சாதிக்கும் காலம் குறித்து நன்மாராயம் சொல்கிறார்கள். மக்காவில் திரும்பிய திசைகளிலெல்லாம் அச்சுறுத்தல் அதிகரித்து இருந்ததொரு காலத்தில் இத்தகையதொரு சாதனை குறித்து நினைத்துப் பார்க்க மனம் வருமா? வருவது சாத்தியமில்லைதான், எனினும், அந்த அற்புத மனிதரின் உள்ளத்தில் அந்த சாதனை நிழலாடியது.

ஒரு செயலுக்கும் அடுத்து வரும் செயலுக்கும் இடைப்பட்ட இடைவெளியை காலம் எனக் கூறுகிறோம்.சூரியன் சந்திரனின் இயக்கத்தை வைத்தே காலம் கணிக்கப்படுகிறது. மனிதன் காலமின்றி வாழவே முடியாது. நாள் தோறும் மாறி வரும் சிறு பொழுதும், ஆண்டு தோறும் மீண்டு வரும் பெரும் பொழுதும் காலத்தின் அவசியத்தைக் காட்டுகிறதல்லவா?

*.காலத்தின் பார்வையிலிருந்து மனிதன் எதனையும் மறைத்து விடமுடியாது.
*.மனிதன் காலத்திற்கு அடங்கி நடக்கவேண்டுமே தவிர காலம் ஒரு போதும் அடங்கி நடக்காது.
*. காலத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலை எந்தப் பெருவீரனும்,பேரரசனும் பெற்றிருக்கவில்லை.
*.காலமென்பது ஓய்வற்றது. உலகின் உயிர் போன்றது.நிகழ்ச்சிகளை சுமந்தோடும் ஆறு.

காலத்தின் அருமையயையும் நேரத்தின் பெருமையையும் இவையனைத்தும் தெளிவு படுத்துகின்றன.

"சிறு துள்ளி பெருவெள்ளம்" போன்று பல மணித் துளிகள் ஒன்றிக் கலப்பதே காலமாகும். ஒரு நிமிட நேரம் அளவிற் சிறிதாயினும் அந்நேரத்துள் உலகில் நிகழும் நிகழ்சிகள்,அதிசயங்கள் உலகோரை அதிசயிக்க வைக்கின்றன.

சிந்திக்க விரும்புபவனுக்கும், நன்றி செலுத்த விரும்புவனுக்கும் இரவையும் பகலையும் ஒன்று மற்றொன்றை தொடர்ந்து வருமாறு அமைத்துள்ளான்;.(அல்குர்ஆன். 25:62)

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
மறுமை நாளில் நான்கு கேள்விகள் கேட்கப்படாமல் ஒரு அடியானின் பாதங்கள் நகரவே செய்யாது.

1.அவனது வாழ்நாளை எப்படிச் கழித்தான்?
2.அவனது இளமையை எவ்வாறு செலவிட்டான்?
3.அவனது செல்வத்தை எப்படி திரட்டடினான் (சம்பாதித்தான்) ?
அதை எவ்வாறு செலவு செய்தான் ? என்றும் நேட்கப்படும்.
4.அவனது கல்வி கற்றதன் மூலம்; எவ்வாறு செயலாற்றினான்.?
(ஆதாரம் பஸ்ஸார், தப்ரானி)


ஆயுளை பொதுவாகக் கூறிய நபிகளார்(ஸல்) வாலிபத்தை குறிப்பாகக் குறிப்பிடக் காரணம் என்ன?

ஆயுளிலே உட்பட்டது தானே வாலிபம். அதற்குத் தனி முக்கியத்துவம் கொடுத்து விசாரணை செய்யப்படுவதன் நோக்கம்; என்ன ? ஒரு மனிதனின் ஆயுளில் அவனது வாலிபப் பருவமே மிகவும் முக்கியானது.அதில்தான் அவன் தீரத்தோடும் விவேகத் தோடும் செயல்படுகிறான்.அதுவே அவனது பொற்காலம்.சாதிக்க வேண்டிய வயது. குழந்தைப் பருவமும்; முதுமைப்பருவமும் பலவீனமான பருவங்கள். இந்த இரு பலவீனமான பருவத்திற்கிடையே வந்து போகும் திடமான பருவமே இளமைப் பருவம். எனவே, குறிப்பாக வாலிபப்பருவம் பற்றி வசாரணை செய்யப்படும் என்றார்கள் நபியவர்கள்.

பலவீனமான நிலையில் உங்களை அல்லாஹ் படைத்தான்.பின்னர் பலவீனத்திற்குப்பின் பலத்தை ஏற்படுத்தினான். பின்னர் பலத்திற்குப் பின் பலவீனத்தையும் நரையையும் ஏற்படுத்தினான். (அவன் நாடியதைப் படைப்பான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன்). (அல்குர்ஆன். 30:54)

பலவீனமான நிலையென்றால் குழந்தைப்பருவம் என்றும் பலவீனத்திற்குப்பின் பலம் என்றால் வாலிபப்பருவம் என்றும் மீண்டும் பலத்திற்குப் பின் பலவீனம் என்றால் முதுமை என்றும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

“காலம் கண் போன்றது ! கடமை பொன் போன்றது”
சொல்லிலும்,செயலிலும் இஸ்லாத்தைக் கலப்போம்.
சமூக உறவில் சகோதரத்துவத்தை வளர்ப்போம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::""""""""""""":::::::::::::::::::::::::::::::::::::::::::
அஹமட் யஹ்யா,,ஹொரோவபதான, அனுராதபுரம்..SRI LANKA.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx